கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..!
கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக, 4வது முறையாக, கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார் எடியூரப்பா. கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தார் எடியூரப்பா. 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கிறது பாஜக.
அந்தவகையில், எடியூரப்பா பதவியேற்கும் முன்பே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எடியூரப்பாவிற்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுத்தான் முதலமைச்சராக பொறுப்பேற்றார் எடியூரப்பா. அதன்படி, 2 ஆண்டுகள் முடிந்த்தும் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கூட்டம் பெங்களூருவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அந்த கூட்டத்தில், கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், கர்நாடக மாநில உள்துறை அமைச்சரான பசவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவரது தலைமையில் அமைச்சரவையும் மாற்றியமைக்கப்படுகிறது.