இடம் தர மறுத்த பார் கவுன்சில் பூட்டு உடைப்பு!!! கேரளா பெண் கலெக்டர் அதிரடி ஆக்ஷன்...
இடம் தர மறுத்த வழக்கறிஞர் சங்கத்தினர்; பூட்டை உடைத்து நிவாரண பொருள்களை பாதுகாத்த திரிசூர் ஆட்சியர் அனுபமா செய்த செயல் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.
கேரள மாநிலம் தற்போது கடும் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். 325 பேர் இந்த வெள்ளம் மற்றும் அதனை தொடந்து ஏற்பட்ட நிலச்சரிவிற்கு பலியாகி இருக்கின்றனர். கேரளத்தையே புரட்டி போட்டிருக்கிறது இந்த கடும் மழைப்பொழிவு.
இதனால் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து அத்தியாவசிய தேவைக்காக அவதிப்பட்டு வரும் மக்களுக்கு நாடெங்கிலும் இருந்து நிவாரணப்பொருள்கள் வந்து கொண்டிருக்கின்றன. அரசும் பொதுமக்களும் ஒன்றிணைந்து இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் திரிசூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படுவதற்காக வந்திறங்கி கொண்டிருக்கும் நிவாரணப்பொருள்களை பத்திரப்படுத்த போதிய இடம் இல்லாத சூழல் நிலவி இருக்கிறது. இதனை தொடந்து வழக்கறிஞர் சங்கத்தினரிடம் இந்த பொருள்களை இறக்கு வைப்பதற்காக இரண்டு அறைகளை மட்டும் ஒதுக்கி தரும்படி திரிசூர் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
ஆனால் பொருள்களை இறக்கி வைக்க வேண்டிய தருணத்தில் அந்த அறைகளுக்கான சாவியை கொடுக்காமல் இருந்திருக்கின்றனர் சங்கத்தினர். தொடர்ந்து அனுபமா பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி அந்த அறைகளுக்கு இடப்பட்டிருந்த பூட்டினை உடைத்து நிவாரணப்பொருள்களை அங்கே பத்திரபபடுத்தி இருக்கிறார்.
முன்னரே நோட்டீஸ் கொடுத்த பிறகும் கூட வழக்கறிஞர் சங்கத்தினர் இப்படி அலட்சியமாக இருந்தது இடம் கொடுக்க விருப்பம் இல்லாததனால் தான் என கூறப்படுகிறது. இது போன்ற பேரிடர்களின் போது மக்களின் நலனுக்காக இப்படி இடம் எடுத்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்பதால் அனுபமா மக்களின் நலக்காக பூட்டை உடைத்து பொருள்களை அங்கு வைத்திருக்கிறார்.
தொடர்ந்து அந்த அறைகளை வேறு பூட்டுகள் கொண்டு பூட்டி நிவாரணப்பொருள்களை பாதுகாக்கும் அதிகாரியிடம் ஒப்படைத்திருக்கிறார் அனுபமா. இப்படி ஒரு சூழ்நிலையில் கூட இடம் தர மறுத்த வழக்கறிஞர் சங்கத்தின் மீது இதனால் பொது மக்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அதே சமயம் அனுபமாவின் இந்த அதிரடி நடவடிக்கையையும் மக்கள் பராட்டி வருகின்றனர்.