உஷார்... வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் ஸ்டிரைக்!!
பொதுத்துறை வங்கிகளை தனியாருடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 22ம் தேதி, அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பொதுத்துறை வங்கிகளை தனியாருடன் இணைப்பது, பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் கடன் சுமை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை ஏற்படுத்தியது, வாராக்கடன்களை வசூலிக்காமல் ரத்து செய்வது ஆகியவற்றை, ‘வங்கிகள் சீர்திருத்தம்’ என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுத்துகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து வரும் 22ம் தேதி நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்கள், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் நடக்கும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 60 ஆயிரம் ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள். அன்று தினம் மத்திய அரசின் நட வடிக்கையை திரும்பப்பெற வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். மேலும், டெல்லியில் செப்டம்பர் 25ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.