கறுப்புப் பணத்தை மாற்ற உதவிய 27 வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட் : மத்திய அரசு அதிரடி!
மத்தியஅரசு அறிவித்த செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி, அரசு வங்கி மூத்த அதிகாரிகள் 27 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திடீர் ரெய்டு
பெங்களூரு, சென்னை மற்றும் ஈரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்,வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பெங்களூருவில் இரு அரசு பொறியாளர்கள் வீட்டில் இருந்து ரூ. 5.7கோடிக்கு புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த அளவுக்கு ரூபாய் அவர்களிடம் புதிய ரூபாய் நோட்டு இருந்ததற்கு வங்கி அதிகாரிகள் துணை போய் இருக்கலாம் என வருமான வரித்துறையினர் சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நிதியமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
விதிமுறைகள்
மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்குப் பின், வங்கிகளுக்கு பல விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதை பொதுத்துறை வங்கிகளின் சில மூத்த அதிகாரிகள் முறையாக பின்பற்றவில்லை, விதிமுறைகளை மீறி நடக்கின்றனர் என எங்கள் கவனத்துக்கு வந்தது.
முறைகேடுகள்
இதையடுத்து, பல்ேவறு பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிந்து வரும் 27 மூத்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும், 6 அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு இடமாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிப்படையான பணப் பரிவர்த்தனைகள் செய்யவே அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. இதில் முறைகேடான பணப்பரிமாற்றங்களை அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. அந்த நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேசமயம், கடந்த மாதம் 9-ந் தேதியில் இருந்து வங்கி அதிகாரிகள் கால நேரம் பார்க்காமல், மிகச்சிறப்பான வகையில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.