ஹிஜாப் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக நாளை முதல் வரும் 21 ஆம் தேதி வரை பெங்களூருவில் பொது இடங்களில் கூட்டம் கூடவும், போராட்டங்களில் ஈடுபடவும் காவல்துறை தடை விதித்துள்ளது. 

ஹிஜாப் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக நாளை முதல் வரும் 21 ஆம் தேதி வரை பெங்களூருவில் பொது இடங்களில் கூட்டம் கூடவும், போராட்டங்களில் ஈடுபடவும் காவல்துறை தடை விதித்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதைக் கர்நாடக அரசு தடை செய்துள்ளதை அடுத்து, அங்கு மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பள்ளியில் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் ஹிஜாப், காவி துண்டு அணிந்து வருவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும், இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 2 வாரங்களுக்கு இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்துள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 25 அன்று, கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் நாளை காலை 10.30 மணி அளவில் தீர்ப்பளிக்க உள்ளது. இதனால், கர்நாடகாவில் தற்போதே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக வரும் 21 ஆம் தேதி வரை பெங்களூருவில் பொது இடங்களில் கூட்டம் கூடவும், கொண்டாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடவும் அம்மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.

ஏற்கனவே ஹிஜாப் அணிந்த மாணவிகள் கல்லூரியின் விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் ஹிஜாப் உடைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றதோடு, இந்து மாணவர்கள் காவி நிற ஷால்களை ஹிஜாப் அணிவதற்கு எதிராக அணிந்து கல்வி நிறுவனங்களில் போராட்டங்களையும் நடத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் போராட்டங்கள் வெடித்ததால் கர்நாடக அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து உத்தரவிட்டது. ஹிஜாப் மீதான தடை காரணமாகவும், அரசு உத்தரவுக்கு ஆதரவான போராட்டங்கள் காரணமாகவும் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் வகுப்புவாத மோதல்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு, காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.