பத்திர பதிவிற்கு மீண்டும் தடையா..? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..
தமிழகத்தில் விவசாய நிலங்களை மனைகளாக போட்டு விற்பனை செய்வதற்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கின் எதிரொலியாக கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் பத்திரபதிவு வெகுவாக குறைந்து விட்டது. இதற்கான தடை உத்தரவையும் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி உயர்நீதிமன்றம் அறிவித்தது .
இதற்கு பின் , வகைபடுத்தப்பட்ட நிலத்தின் விவரங்களை அறிக்கையாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது . இதனை தொடர்ந்து நேற்று முன்தினம், பத்திரபதிவு தொடர்பாக தீர்ப்பை வழங்கியது உயர்நீதிமன்றம் .
அதில்,அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு ஏற்கனவே விற்பனை செய்திருந்தால், அதை மறுவிற்பனை செய்யலாம் என்றும்,
மேலும், அங்கீகாரம் இல்லாத விற்பனை செய்யப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என கூறி , அதன் மீதான தடையை நீட்டித்து, இந்த வழக்கின் மீதான விசாரணையை ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது .
இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு ஏற்கனவே விற்பனை செய்திருந்தால், அதை மறுவிற்பனை செய்யலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியதையடுத்து, இதற்கு எதிராக மீண்டும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் .
எனவே பத்திரபதிவு செய்வதற்கு மீண்டும் தடை விதிக்கப் படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .