சமூக ஊடகங்களில் தலிபான்களுக்கு ஆதரவாகப் பதிவு... கொத்தாக 14 பேரைத் தூக்கிய போலீஸ்..!
சமூக ஊடகங்களில் தலிபான்களுக்கு ஆதரவாகப் பதிவிட்ட மருத்துவ மாணவர் உள்பட 14 பேரை அஸ்ஸாம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா உள்பட நேட்டோ படைகள் விலகிவரும் நிலையில், காபூலை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்நாடு மக்கள் அச்சத்தில் உள்ளனர். தாலிபான்களுக்கு பாகிஸ்தான், சீனா உள்பட சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அஸ்ஸாமில் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டனர். தற்போது தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் மருத்துவ மாணவர் ஒருவரும் அடக்கம்.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் எனப்படும் உபா, தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம், குற்ற நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த 14 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே தலிபான்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅஸ்ஸாம் போலீஸ் உயரதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சமூக ஊடகங்களில் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதவிடக் கூடாது. அப்படி பதிவிடுவதை கண்காணித்துவருகிறோம்.
தலிபான்களுக்கு ஆதரவாக கருத்திட்டவர்களை அஸ்ஸாமில் கம்ரூப் பெருநகரம், பார்பேட்டா, துப்ரி மற்றும் கரீம்கஞ்ச் மாவட்டங்களிலிருந்து தலா இருவர் வீதம் கைது செய்துள்ளோம். தர்ராங், கச்சார், ஹைலகண்டி, தெற்கு சல்மாரா, கோல்பாரா மற்றும் ஹோஜாய் மாவட்டங்களிலிருந்து தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு எதிராகவும் தலிபான்களுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் எவரேனும் பதிவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.