முன்னாள் டிஜிபியின் ஆபாச பேச்சு.. நிர்பயாவின் தாய் வேதனை
கர்நாடக மாநில காவல் துறை முன்னாள் டிஜிபி சங்கிலியானாவின் ஆபாச பேச்சுக்கு நிர்பயாவின் தாய் ஆஷா தேவி வேதனை தெரிவித்துள்ளார்.
சமுதாயத்தில் சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவில், டெல்லியில் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, போலீஸ் அதிகாரி ரூபா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக காவல்துறை முன்னாள் டிஜிபி சங்கிலியானா, ஆஷா தேவியின் உடலமைப்பே இவ்வளவு கட்டுக்கோப்பாக அழகாக இருக்கிறது. அப்படியென்றால் அவரது மகள் நிர்பயா எப்படி இருந்திருப்பார்? என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அதுமட்டுமல்லாது, பலம் வாய்ந்த ஆண்கள் பலாத்காரம் செய்தால், அவர்களிடம் சண்டையிடாமல் பெண்கள் சரணடைந்து விடுங்கள். அப்படி செய்தால், உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கலாம். அதன்பின்னர் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
காவல்துறை முன்னாள் டிஜிபி சங்கிலியானாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் சங்கிலியானாவுக்கு கண்டனம் தெரிவித்து ஆஷா தேவி திறந்த மடல் எழுதியுள்ளார். அதில், பெங்களூருவில் பெண்கள் நடத்திய நிகழ்ச்சியில் எனது ஆதரவை தெரிவிப்பதற்காகவே சென்றேன். நல்ல வேளை எனது மகளுக்கு நடந்த மோசமான பாதிப்பு எனக்கு நடக்கவில்லை.
சங்கிலியானா பேசியபோது நான் மேடையில் அமர்ந்திருந்தேன். அவர் என்ன பேசினார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அங்கேயே அவருக்கு பதிலளிக்க முடியவில்லை. அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய பிறகு தான் அவரது வார்த்தைகளில் இருந்த கடுமையை புரிந்து கொண்டேன். எனது மகளுக்காக நடந்த போராட்டத்தை நீங்கள்(சங்கிலியனா) அவமதித்து விட்டீர்கள். நமது சமூகத்தில் பொதுவாக இருக்கும் மோசமான, தரக்குறைவான வர்ணனையை பொதுமைப்படுத்திவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.