மத்திய அரசு செல்லாது என அறிவித்த 1000, 500 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் வங்கிகளில் தபால் நிலையங்களில் முன்பும் காத்திருக்கிறார்கள்.
செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றும்முன், மக்கள் வங்கிகள், தபால்நிலையங்களில் கிடைக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும்.

அந்த விண்ணப்பத்தில், வங்கியின் பெயர் மற்றும் கிளை, விண்ணப்பதாரரின் பெயர், சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டையின் பதிவெண், அளிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, மதிப்பு, போன்ற தகவல்களைப் பூர்த்தி செய்து வேண்டும. மேலும், கையெழுத்து மற்றும் நாள், இடம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
ஆதார் அட்டை ,ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ,பாஸ்போர்ட் ,நூறுநாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை , மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகள் ,பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அட்டைகள் இவற்றில் ஏதாவது ஒன்றைக் காண்பிக்க வேண்டும்.

அதன்பின், வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை கொடுத்து அதற்கான முழு மதிப்பிலான தொகையையும் பெறலாம்.
இன்று முதல் 24-ந்தேதி வரை தனிநபர் ஒருவருக்கு ரூ.4000 வரை வங்கிகளில் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெறலாம்.
ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் அதற்கான விதிமுறைகளுடன் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வர்த்தக வங்கிகள், ஆர்ஆர்பி.க்கள், அரசு கூட்டுறவு வங்கிகள், அல்லது எந்த ஒரு தலைமை மற்றும் துணை தபால் அலுவலகங்களிலும் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
