“எந்த ஏழையும் பசியோட இருக்ககூடாது, மருத்துவம் பார்க்க முடியாம யாரும் சாகக்கூடாது” - ஆதித்யநாத்தின் நெஞ்சை உருக்கும் பேச்சு
என்னுடைய ஆட்சியில் எந்த ஏழையும் பசியோடு இருக்ககூடாது, மருத்துவம் பார்க்க முடியாம யாரும் சாகக்கூடாது என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் நெஞ்சை உருக்கும் வகையில் மக்களிடத்தில் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா கட்சி 15ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு முதல்வராக கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் முதல்வராக ஆனபின், மாநிலத்தில் ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகளை செய்து வருகிறார். பெண்கள் பாதுகாப்புக்கு ஆன்ட்டி ரோமியோ படை , விவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி என பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான பண்டேல்கண்ட் பகுதியில் நேற்று முதல்வர் ஆதித்யநாத் பயணம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது, ஜான்சி நகரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “ என்னுடைய ஆட்சியில் ஊழல் ஒருபோதும்இருக்காது. ஊழலை பொருத்துக் கொள்ளவும்மாட்டேன். மாநிலத்தில் முறையான மின்சாரம் அனைவரும் கிடைக்கும் என தேர்தல் நேரத்தில் நான் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவேன். பண்டேல்கண்ட் பகுதியை மற்ற மாவட்டங்களோடு இணைப்பேன்.
என்னுடைய ஆட்சியில் எந்த ஏழை மக்களும் பசியோடு இருக்க கூடாது. எந்த ஏழையும் மருத்துவம் பார்க்க வசதியில்லாமல் இறந்துவிட்டான் என்ற நிலையும் இருக்க கூடாது.
சட்டவிரோத இறைச்சிக் கடைகளை நான் சுயமாக மூடவில்லை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவையும் நிறைவேற்றினேன். இந்த பகுதியில் இருக்கும் குடிநீர் பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்த பகுதி மக்களிடம் கூட்டத்தில் பேசும் முன், காலையில், ஜான்சி நகரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஆதித்யநாத், ஆய்வு நடத்தினார். நோயாளிகளுக்கு எப்படி மருத்துவம் அளிக்கப்படுகிறது, தரமான மருந்துகள் தரப்படுகிறதா, மற்ற வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தினார்.
மேலும், தாகோரி நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்குச் சென்ற முதல்வர் ஆதித்யநாத், மாணவர்களுக்கு மதியஉணவு எப்படி வழங்கப்படுகிறது, தரமாக, சுவையாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினார்.
முதல்வராக பொறுப்பு ஏற்றபின் பன்டேல்கண்ட் பகுதிக்கு ஆதித்யநாத் செல்லும் முதல் பயணம் இதுவாகும். பண்டேல்கண்ட் பகுதியில் மொத்தம் உள்ள 13 மாவட்டங்களில் 6 மாவட்டங்கள் உ.பி.யிலும் 7 மாவட்டங்கள் மத்தியப்பிரதேசத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.