உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் ஷூ வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் குறித்து கோஷமிட்ட அந்த வழக்கறிஞரின் செயலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நீதிமன்றத்தில் வைத்து ஒரு வழக்கறிஞர் ஷூ வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் செயலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீதிபதி கவாய் அவமதிப்பு

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வழக்கறிஞர் திடீரென அவர் மீது ஷூ வீச முயன்றார். மேலும், அவர் "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" என்று உரத்த குரலில் கோஷமிட்டார். உடனடியாகச் செயல்பட்ட நீதிமன்றப் பாதுகாவலர்கள், கூச்சலிட்ட அந்த வழக்கறிஞரை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றினர்.

இந்த அசாதாரணமான சூழ்நிலையிலும், தலைமை நீதிபதி கவாய் எவ்விதப் பதற்றமும் அடையவில்லை. வழக்கறிஞர்களைப் பார்த்து, "கவனத்தைச் சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது," என்று கூறி, எந்தப் பரபரப்பும் இன்றி வழக்குகளின் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

Scroll to load tweet…

பிரதமர் மோடி கண்டனம்:

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாகத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.

பின்னர், இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற செயல், ஒவ்வொரு இந்தியரையும் கோபமடையச் செய்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்க செயல்.

கடுமையான சூழ்நிலையைச் சந்தித்தும் நீதிபதி கவாய் அவர்கள் காட்டிய அமைதியை நான் மிகவும் பாராட்டுகிறேன். நீதிபதி கவாய் அமைதி காத்தது, நீதியின் விழுமியங்களையும், நமது அரசியலமைப்பின் உணர்வையும் வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்."

இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.