ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மக்கள் தொகை குறைவதை சமாளிக்கும் வகையில் 3, 4வது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ஊக்கத் தொகை வழங்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தீர்மானித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் மக்கள் தொகை குறைவதை சமாளிக்கும் நோக்கில், 3 மற்றும் 4வது குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு நேரடி நிதி ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த திட்டத்தின் படி:

3வது குழந்தை பிறந்தால் ₹30,000

4வது குழந்தை பிறந்தால் ₹40,000

என்ற ஒருமுறை நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை நேரடியாக தாயின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை பிறப்புக்குப் பிறகு குடும்பங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உதவியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி:

3வது குழந்தைக்கு மாதம் 3 கிலோ சிறுதானியம்

4வது குழந்தைக்கு மாதம் 6 கிலோ சிறுதானியம்

வழங்கப்படும் என அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். அதோடு “NTR Baby Kit” வழங்கும் திட்டமும் இதில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

இந்த திட்டம் இன்னும் இறுதி ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் கிராம சபைகள் மூலம் மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு, அதன் பின்னர் அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி சென்றால், 2026 ஆகஸ்ட் 15 முதல் திட்டம் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது, ஆந்திரப் பிரதேசத்தின் “Total Fertility Rate” தற்போது 1.5 ஆக குறைந்துள்ளது. மக்கள் தொகை சமநிலையை பராமரிக்க குறைந்தபட்சம் 2.1 தேவைப்படுவதாகவும், எதிர்காலத்தில் இளைஞர் மக்கள் தொகை குறைந்தால் பொருளாதார சிக்கல்கள் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஜப்பான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் தொகை சரிவு பிரச்சினைகளை எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டுள்ளார்.