‘பத்திரிகையாளர் பணியே கேள்வி கேட்பதுதான்’ - அமித்ஷா மகனுக்கு பெண் பத்திரிகையாளர் ரோகினி சிங் பதிலடி
அமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் தொடர்பாக நான் வெளியிட்ட செய்திக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், நான் என் கருத்தில் இருந்து பின் வாங்கமாட்டேன் என்று பத்திரிகையாளர் ரோகினி சங் துணிச்சலாகத் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா மகன்
பா.ஜனதா தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா நடத்திய நிறுவனத்தின் லாபம் ஒரு ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்து ரூ.80 கோடியை எட்டியது என்று ‘தி வயர்’ எனும் செய்தி இணையதளம் புலனாய்வு கட்டுரை வெளியிட்டு இருந்தது. இந்த கட்டுரையை ரோகினி சிங் எனும் பத்திரிகையாளர் எழுதி இருந்தார்.
ரூ.100 கோடி இழப்பீடு
இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்த அமித் ஷா வின் மகன் ஜெய்ஷா, ‘ஆதாரமில்லாதது, அவதூறு பரப்பும் நோக்கில் எழுதப்பட்டது’ எனக் கூறினார். மேலும், தி வயர் நிறுவனத்திடம் ரூ. 100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கும் தொடரப்பட்டது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
இந்த கட்டுரையைத் தொடர்ந்து அதை எழுதிய பத்திரிகையாளர் ரோகினி சிங்குக்கு பேஸ்புக்கில் ஏராளமானோர் அவர் மீது அவதூறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும்ெதரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ரோகினி சிங் பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-
கேள்வி கேட்பதுதான்
மற்ற பத்திரிகையாளர்கள் புனிதத்தன்மையுடன் என்ன செய்ய வேண்டும் என்று நான் எழுதுவதில்லை. நான் என்னைப் பற்றிமட்டும்தான் பேச முடியும். பத்திரிகையாளர் பணியின் முதன்மையானதே உண்மையை வலிமையுடன் பேசுவதுதான். ஆட்சியாளர்களை கேள்வி கேட்பதுதான்.
அப்போதுகூட இல்லை
கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, இதேபோன்று ராபர்ட் வத்ரா-டி.எல்.எப். குழுமத்துக்கு இடையிலான விவகாரத்தை நான்தான் வெளிக்கொண்டுவந்து செய்தி வெளியிட்டேன். இப்போது சந்திக்கும் எதிர்ப்புகள் போல் அப்போது கூட நான் சந்தித்தேனா என்று நினைவில் இல்லை.
இப்போது எனக்கு எதிராக தரம் தாழ்ந்த விமர்சன பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. என்னுடைய தொலைபேசி அழைப்புகளைக் கூட பாஜனதாவின் மூத்த தலைவர் ஒருவருக்கு ெநருக்கமானஒருவர் பதிவு செய்து வருகிறார்.
தரம்தாழ்ந்த பிரசாரம்
எனக்கு எதிராக சமூக ஊடகங்களில் மிகவும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பொதுவாக பணமும், அதிகாரமும் படைத்தவர்கள் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்த இதுபோன்ற தாக்குதல் கருவிகளாகப் பயன்படுத்துவார்கள்.
எனக்கு மற்றவர்களைப் பற்றி கவலையில்லை. நான் இந்த விவகாரத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. என்னைச் சுற்றி இது போன்ற எதிர்ப்புகள் இருப்பதை பார்க்கிறேன். இதுபோன்ற புலனாய்வு கட்டுரைகள் செய்வதற்கு மாறாக பத்திரிகை பணியை விட்டு விலகிவிடமாட்டேன். நான் துணிச்சல் மிகுந்தவர் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள இந்த செய்திகளை நான் கொடுக்கவில்லை. இதுபோன்ற செய்திகளை கொடுப்பதுதான் பத்திரிகையியல்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.