Along with males in state liquor stores in Kerala women can work

கேரள மாநிலத்தில் அரசு நடத்தும் மதுக் கடைகளில் ஆண்களுடன் சேர்ந்து, பெண்களும் வேலை செய்யலாம். அதில் தடையில்லை என்று மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரள மாநில அரசின் மது விற்பனை கழகம் மற்றும் இதர அமைப்புகளில் கீழ் செயல்படும் மது விற்பனை கடைகளில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். பெண்களுக்கு மது விற்பனை கழகத்தின் நிர்வாக அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மட்டத்தில் மட்டுமே பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், அரசின் மது விற்பனை கடைகளிலும் ஆண்களுடன் இணைந்து, பெண்களும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காதது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமத்துவ உரிமையை மீறும் செயலாகும். ஆதலால், தங்களுக்கு மதுக்கடைகளில் பணி ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பெண்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், “ கேரளாவில் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மது விற்பனை கடைகளில் ஆண்களுடன் இணைந்து பணியாற்ற பெண்களுக்கு தடையில்லை. அவர்களுக்கு பணி வழங்கலாம்’’ என உத்தரவிட்டது.

இதற்கிடையே கேரளா அக்பரி கடைகளுக்கான விதிமுறைகளிலும், அன்னிய மதுபான விதிகள் 2002 ஆகியவற்றிலும் மாநில கலால்வரித் துறை திருத்தம் கொண்டு வந்து, அதில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.