ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடர அனுமதி: அலகாபாத் உயர் நீதிமன்றம்!
ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையின் அறிவியல்பூர்வ ஆய்வினை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையின் அறிவியல்பூர்வ ஆய்வினை தொடர அனுமதி அளித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதி கமிட்டியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நீதியின் நலனில் அறிவியல்பூர்வ ஆய்வு அவசியம் எனவும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் பழங்கால இந்துக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த மே மாதம் நான்கு பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “குறிப்பிட்ட இடத்தில் ஸ்வயம்பு ஜோதிர்லிங்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததாகவும், கி.பி. 1017 இல் முகமதி கஜினியின் தாக்குதலிலிருந்து தொடங்கி, சிலை வழிபாட்டாளர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்த முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அது சேதமடைந்தது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட வீடியோ ஆய்வின் போது, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை விடுத்து மற்ற இடத்தில் தொல்லியல் துறையின் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹரியானா விவகாரம்: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி., கவன ஈர்ப்பு நோட்டீஸ்!
இதனை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (ஞானவாபி மசூதி கமிட்டி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மசூதி கமிட்டிக்கு அறிவுறுத்தியது.
அதன்படி, மஸ்ஜித் கமிட்டி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒன்று தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையின் அறிவியல்பூர்வ ஆய்வினை தொடர அனுமதி அளித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதி கமிட்டியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மசூதி வளாகத்தில் தொல்லியல் ஆய்வுக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது நியாயமானது; நீதியின் நலனில் அறிவியல்பூர்வ ஆய்வு அவசியம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.