All out strike
சத்தீஷ்கர் மாநிலத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் நக்சலைட்டுகளை ஒழிக்க ஆல் அவுட் ஸ்ட்ரைக் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அங்கு முகாமிட்டு நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொஷ்டு வருகின்றனர்.
மேலும் சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சாலை அமைத்து வரும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது படை பிரிவை சேர்ந்த 99 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நக்சலைட்டுகள் நடத்திய அதிரடி தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் உட்பட சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் பலியானார்கள். நக்சலைட்டுகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கொடூரமானது. இதனால் நாடே மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில், நக்ஸலைட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறை ஆலோசகர் விஜய் குமார் மற்றும் சி.ஆர்.பி.எப். செயல் தலைவர் சுதீப் லக்தகியா ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஆல் அவுட் ஸ்ட்ரைக் நடவடிக்கை மூலம் இரண்டரை மாதத்திற்குள் நக்சலைட்டுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகமுள்ள 10 மாநிலங்களின் உயர் அதிகாரிகள் அளவிலான ஆலோசனை கூட்டம் வருகின்ற மே 8-ம் தேதி நடைபெறவுள்ளது .
