ஆம்புலன்ஸ் இல்லாததால் உயிரை விட்ட அலிகார் பல்கலைகழக பேராசிரியர்....
உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய மொழி துறையில் தலைமை பேராசிரியராக பணியாற்றியவர் டி. மூர்த்தி (64).
தமிழகத்தை சேர்ந்தவரான இவருக்கு சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
இதனை அடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மூர்த்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்காக, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட சிறப்பு ஆம்புலன்ஸ் தேவைப்பட்டது. அதற்காக ஏற்பாடும் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ், 6 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது.
உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படாததால் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். அது மட்டுமல்லாமல் மருத்துவமனையில் ஆவணங்கள் தயாராவதிலும் தாமதம் ஏற்பட்டது என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற காலதாமதம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் அமைத்துள்ளார். தற்போது, மூர்த்தியின் உடலை, தமிழகத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.