சமாஜ்வாடி கட்சியை உடைத்து தனிக்கட்சியை தாம் தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் பொய் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், தமது சித்தப்ப சிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்களை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இதனால் சமாஜ்வாடி கட்சிக்குள் குழப்பம் வெடித்தள்ளது. இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முலாயம் சிங் யாதவ், லக்னோவில் கூட்டினார். அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், எனக்கு எதிராக கட்சிக்குள்ளேயே சதி நடந்து வருகிறது என்றார். இந்த சதி குறித்து விசாரிக்கப் போகிறேன் என்றும் அகிலேஷ் கூறினார். 

சமாஜ்வாடி கட்சியை உடைடத்து தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய் என்றும் அவர் கூறினார். கட்சியில் இருந்து, என்னை நீக்க முடிவெடுத்திருப்பதாக அறிந்தபோது மிகவும் காயப்பட்டு போனேன் என்றும், முலாயம் சிங் யாதவ் விரும்பினால், நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும் அகிலேஷ் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அரசியல்தான் என்னுடைய வாழ்க்கை. தற்போது அரசியலைவிட்டு என்னை விலக்கி வைத்தால் நான் எதிர்காலத்தில் என்ன செய்வேன் என்றும் அகிலேஷ் யாதவ், கண்ணீர் மல்க பேசியுள்ளார்.