இந்தியாவில் வாரிசு ஆட்சிதான் நடக்கிறது - ராகுல் காந்திக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு
இந்தியாவில் வாரிசுகள் ஆட்சி நடக்கிறது என்று சமீபத்தில் அமெரிக்காவில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உலக அரசியல் வரலாற்றில் ஏராளமானோர் அரசியல் பின்னணியில் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். இதற்கு அதிகமான உதாரணங்களைக் காட்ட முடியும் என்று அகிலேஷ்தெரிவித்துள்ளார்.
ராகுல் பேச்சு
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, சமீபத்தில் கலிபோர்னியா பல்கலையில் பேசுகையில், ’’ வாரிசு அரசியல் மூலம் தான் இந்தியாவில் ஆட்சி நடக்கிறது. சமாஜ்வாதியில் அகிலேஷ், தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின்ஆகியோர் வாரிசுகள், இந்தி திரைப்படத்துறையில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் கூட வாரிசுதான்’’ என்று பேசி இருந்தார்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதற்கு அவர் கூறியதாவது-
ஏராளமான உதாரணம்
அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து ஏராளமானோர் வாய்ப்பு பெற்று அரசியலுக்குள் வந்துள்ளனர். இதற்கு உலக அரசியலில் ஏராளமான உதாரணங்களைக் காட்ட முடியும்.
வாரிசு அரசியலைப் பற்றி ராகுல் காந்தி என்ன வேண்டுமானாலும் பேசி இருக்கலாம். அது குறித்து பா.ஜனதா மிகவும் கவலைப்படுகிறதே. ராகுல் காந்தி எனது நண்பர். உத்தரப்பிரதேச அரசியல், தேசிய அரசியலை கருத்தில் கொண்டுதான் அவர் கருத்துக்களை தெரிவிப்பார்.
அமெரிக்காவில் வாரிசு அரசியல்
நீங்கள் அமெரிக்க அரசியலை அவரிடம் கேட்டு இருந்தால், அமெரிக்காவில் இருக்கும் வாரிசு அரசியல் குறித்து ராகுல் காந்தி பேசி இருப்பார். அமெரிக்க அதிபரின் மகன், தேர்தலில் போட்டியிட்டு அதிபராக இருந்துள்ளார். ஒரு அதிபரின் மனைவி அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை உலக ஜனநாயகத்தில் காட்ட முடியும்.
குடும்பத்தின் அரசியல் பின்னணியை அடிப்படையாக வைத்து, அரசியலுக்குள் வந்த ஏராளமான மனிதர்களை நாம் உதாரணமாக காட்ட முடியும். அம்பானி, இன்போசிஸ் நிறுவனங்களும் இதேபோன்றுதான் வாரிசுகள் மூலமே நடக்கின்றன. இந்தியாவிலும் அதுதான் நடக்கிறது.
உ.பி. அரசு தோல்வி
உ.பி.யில் ஆளும் பா.ஜனதா அரசின் பட்ஜெட் வளர்ச்சியை மழுங்கடித்துவிட்டது. கடந்த 6 மாதங்களில் எந்தவிதமான புதிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை. நான் ஆட்சியை செய்ததைக் காட்டிலும், இப்போதுள்ள ஆட்சி சிறப்பாகச் செயல்பட முடியுமா என சவால்விடுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.