ஆப்கனில் விபத்துக்குள்ளான விமான இந்திய விமானம் அல்ல: மத்திய அரசு மறுப்பு!
ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது
![Aircraft that crashed in Afghanistan enroute to moscow not Indian civil aviation ministry confirms smp Aircraft that crashed in Afghanistan enroute to moscow not Indian civil aviation ministry confirms smp](https://static-ai.asianetnews.com/images/01hmgx4vabwjc7x28mfrqgdmsh/flight-1705669455178_363x203xt.jpg)
இந்தியாவில் இருந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்கல் வெளியாகின. பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த சம்பவத்தை பதக்ஷான் மாகாணத்தில் உள்ள உள்ள தலிபான்களின் தகவல் மற்றும் கலாச்சாரத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். மாகாணத்தில் உள்ள கரன், மஞ்சன் மற்றும் ஜிபாக் மாவட்டங்களை உள்ளடக்கிய டோப்கானே மலையில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், இந்திய அரசால் திட்டமிடப்பட்டு இயக்கப்படும் அனைத்து விமானங்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பதாகவும், விபத்துக்குள்ளான விமானம் வாடகை விமானமாக இருக்கலாம் எனவும் ஊகங்கள் வெளியாகின.
தமிழ்நாடு பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கிய விமான, இந்திய அரசால் திட்டமிடப்பட்ட விமானமோ அல்லது திட்டமிடப்படாத வாடகை விமானமோ கிடையாது. அது மொராக்கோ நாட்டை சேர்ந்த சிறிய ரக விமானம்.” என பதிவிட்டுள்ளது.