ஒடிசாவில் கடந்த சில மாதங்களாக அதிர்ச்சியூட்டும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக மனைவியின் உடலை கணவன் சுமந்து சென்றது; மகளின் உடலை தந்தை சுமந்து சென்றது...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், எய்ட்ஸ் நோயாளி ஒருவரின் சடலத்தை மயானத்தில் எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டின் முன்பே உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிஷா மாநிலம், பலாசூர் மாவட்டம், டென்டெஜ் கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பையில் வேலை செய்து வந்தார். மும்பையில் வசித்து வந்த இவருக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நபரின் உடல்நிலை மோசமடைந்ததால், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

பின்னர், ஒடிசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை எரிக்க மயானத்துக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், எய்ட்ஸ் தொற்றால் உயிரிழந்த நபரின் உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், பிரச்சனையில் தீர்வு ஏற்படவில்லை. இதன் காரணமாக வேறு வழியில்லாத உறவினர்கள், அவரின் வீட்டின் முன்பே உடலை எரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது