ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்து வருவதை அடுத்து, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்கலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரானால் இதுவரை 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 115 பேர் குணமடைந்துள்ளதாகவும் மீதமுள்ளோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்டா வகை வைரஸைவிட ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக ஆரம்பக்கட்ட ஆய்வுகள் கூறியுள்ளன.
ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தியுள்ளதாகவும், மூன்று பேர் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏழு சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஒமைக்ரான் பாதிப்புகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களிடம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்து வருவதை அடுத்து, பல்வேறு இரவு நேர ஊரடங்கு, கூட்டம் தவீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகின்றன. இதனிடையே கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தலாம் என்று ஏஐசிடிஇ பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார், ஏஐசிடிஇ கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கோவிட் 19 நோயால் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலையும் உயிரிழப்பையும் தடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளை ஏஐசிடிஇ தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. நோய்தொற்று காலகட்டத்தில் கட்டணம் செலுத்துதல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல், போலிச் செய்திகளை மறுத்தல், ஆன்லைன் வகுப்புகள், செமஸ்டர் தேர்வுகள் நடப்பதைக் கண்காணித்தல், இன்டர்ன்ஷிப் ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உயர் கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அனைத்து நேரங்களிலும் கடுமையான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் வழிமுறைகளைப் பின்பற்றி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தங்களின் வளாகங்களைத் திறப்பது, தேர்வுகள் மற்றும் வகுப்புகளை ஆப்லைன் அல்லது ஆன்லைன் அல்லது இரண்டு வகையிலும் நடத்திக் கொள்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
