ஊரடங்கு முடிந்தபின் சுக்கு நூறாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு... இனி ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..!
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதிக்கபட்ட மண்டலங்கள் மூடப்பட்டே இருக்கும்.
கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு போட்டு 13 நாட்களை கடந்த பிறகு அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அடுத்து என்ன செய்வது என கையை பிசைந்து வருகிறது இந்தியா.
ஏனெனில் இனி வரும் கால கட்டம் மிக முக்கியமானது. தற்போதே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாகவும், மக்கள் முடங்கியும் கிடைக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் மூன்றாம் கட்டத்திற்கு நகராமல் இருக்க, வரும் நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடுமையாக கடைபிடிக்க திட்டமிடும் எனக்கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்து விட்டது. கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவில் அடுத்து வரும் சிலநாட்கள் மிக மிக முக்கியமானவை என்பதால் யாரும் வீட்டை விட்டு வராமல் கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில்தான் உள்ளது. வெளிநாடு செல்லாத இந்தியர்களுக்கு பரவும் மூன்றாவது கட்டத்தை அது எட்டவில்லை. அதனால், அதை தடுப்பதற்கு மத்திய அரசு அவ்வப்போது மாநில அரசுகளுடன் ஆலோசித்து போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா காணொளி மூலம் தொடர்பு கொண்டு, அனைத்து மாநில அரசுகளும் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்கான திட்டங்களை உடனடியாக அமல்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறார்.
ஊரடங்கு கொரோனா பரவலை தடுப்பதற்கு நல்வாய்ப்பாக இருப்பதால் அடுத்து வரும் சில நாட்களில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நோய்ப் பரவல் மூன்றாவது கட்டத்தை எட்டாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு திட்டத்தை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இன்னும் ஊரடங்கு உத்தரவு 9 நாட்கள் நீடிக்கப்பட உள்ள நிலையில், அடுத்து கொரோனா அதிகமாக பாதிக்கப்பட இருக்கும் மண்டலங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பகுதிகளை மூடப்படலாம் எனக் கூறப்படுகிறது. பல மாநிலங்களில் கொரோனா மேலும் பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் திட்டத்தை உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து 20 பக்கம் கொண்ட திட்டங்களை கொண்ட ஆவணம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அது சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது.
கடைசியாக உறுதிப்படுத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு குறைந்தது நான்கு வாரங்களுக்கு கொரோனாவின் புதிய பாதிப்புகள் எதுவும் தெரிவிக்கப்படாவிட்டால் மட்டுமே ஊரடங்கு கட்டுப்பாட்டு உத்தி குறைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு எடுக்க விரும்பும் சில நடவடிக்கைகளில், கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சீல் வைப்பது மற்றும் இந்த பகுதிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை நிறுத்துவதும் ஆகியவை அடங்கும். சந்தேகத்திற்கு இடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து கொரோனா சோதனைகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கொரோனா வைரஸுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமையில் வைக்கப்பட இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸுக்கு இரண்டு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் 'நெகடிவ்' என்றால் மட்டுமே நோயாளிகள் வெளியேற்றப்படுவார்கள். லேசான அறிகுறிகள் உள்ளவர்கள்தனிமைப் படுத்தப்படுவார்கள். மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்கள் கொரோனா கவனிப்புக்கான மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள். கடுமையான அறிகுறிகள் உள்ளவர்கள் மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதிக்கபட்ட மண்டலங்கள் மூடப்பட்டே இருக்கும். இந்த பகுதிகளில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து இருக்காது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
கடைசியாக உறுதிப்படுத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு குறைந்தது நான்கு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப் பட்ட மண்டலத்திலிருந்து கொரோனா பாதிப்புகள் எதுவும் தென்படாவிட்டால் ஊரடங்கு திட்டம் சிறிது சிறிதாக விலக்கிக்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.