டார்ச் லைட் வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை; உபி.,யில் விபரீதம்; சஸ்பெண்ட் ஆன தலைமை மருத்துவர்!
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் 32 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனை அந்த இடத்தில் பக்கத்து பெட்டில் படுத்திருந்த வேறொருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து வெளியில் விட, இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதனால் அரசின் கவனத்தைப் பெற்றது இந்தச் சம்பவம். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசு, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த நிகழ்வுக்கு இரவு நேரத்தில் ஏன் அனுமதி கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி, தலமை மருத்துவரை பணியிடை நீக்கம் செய்தது.
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள உன்னாவ் மாவட்ட மருத்துவமனையில், லாப நோக்கற்ற சமூக தொண்டு அமைப்பான ஜகதாம்பா சேவா சமிதி என்ற அமைப்பு கான்பூரைச் சேர்ந்த மருத்துவர் குழு ஒன்றுடன் இணைந்து, இந்த அரசு மருத்துவமனையில் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு அனுமதி கேட்டது. அரசு மருத்துவமனையிலும் அனுமதி வழங்கப் பட்டது.
ஆனால், பொதுவாக பகல் நேரத்தில் தான் அறுவை சிகிச்சை செய்யப்படுமாம். இருப்பினும் எப்படி இரவு நேரத்தில் இந்த கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை. ஆயினும், அந்த தொண்டு நிறுவனமே, ஜெனரேட்டர் மற்றும் மற்ற மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்கிறது மருத்துவமனை.
இந்நிலையில் மருத்துவமனையில் தலைமை மருத்துவரை சஸ்பெண்ட் செய்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.