advani relieved from president election

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு அசுர பலம் இருப்பதால் அக்கட்சி நிறுத்தும் வேட்பாளர்தான் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. இதையடுத்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது. 

இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் பிரதமர் மோடி விரைவில் சந்திக்க உள்ளார். 

குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, எல்.கே.அத்வானி, குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று தெரிவித்துள்ளார். அத்வானியின் இந்த முடிவால் தன்னை குறித்த செய்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் கூறியிருந்த நிலையில் தற்போது,அத்வானியும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமிதாப் பச்சனை வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால், பனாமா பேப்பர்ஸ் முறைகேட்டில் அவர் பெயர் இருந்ததால், ஜனாதிபதி பதவிக்கான போட்டி சாத்தியம் இல்லாமல் போனது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.