விளம்பரங்கள் மூலம் மக்களை இனி ஏமாற்ற முடியாது - ஆப்பு வைக்கும் மத்தியஅரசு
மக்களை ஏமாற்றும் மோசடி விளம்பரங்களை தடுப்பதற்காகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காகவும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படும் என்று, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்தார்.
இது குறித்து, நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் கூறியதாவது-
‘‘பல்வேறு ஊடகங்களில் தவறான, மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள் வந்து கொண்ட இருப்பது உண்மைதான். இதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் உள்ளன.
இதுபோன்ற விளம்பரங்களை கொடுப்பவவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது.
இந்த சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்யும்படி நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கிய பரிந்துரைகள் புதிய சட்ட மசோதாவில் சேர்க்கப்படும்.
மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம் செய்யும் பொருட்களின் உற்பத்தியாளர்கள், அவற்றை விளம்பரப்படுத்தும் பிரபலங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அமைப்புரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்கிடையில், இதற்காக கடந்த 2014-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான கண்காணிப்பு குழுவுக்கு 2015 மார்ச் முதல் இதுவரை மொத்தம் 2220 புகார்கள் வந்துள்ளன.
அவற்றில் 1683 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. 715 புகார்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது’’.
இவ்வாறு பஸ்வான் கூறினார்.