விமானத்தில் பறக்கவும் ‘கட்டாயமாகிறது ஆதார் கார்டு’ - மத்திய அரசு திட்டம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப்பயணத்துக்கும் ஆதார் கார்டைகட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ‘பான்கார்டு’, வருமானவரி ரிட்டன், வங்கிக் கணக்கு தொடங்க, அரசின் மானியங்கள் பெற, புதிய வாகனப்பதிவு உள்ளிட்ட பலவற்றுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போது விமானப்பயணத்துக்கும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ‘விப்ரோ’ நிறுவனத்திடம் கலந்தாய்வு செய்துள்ள மத்தியஅரசு, ஆதார் அடிப்படையிலான பயணிகள் வருகையை பதிவு செய்யும் மென்பொருளை உருவாக்க கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து விமானநிலையங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த ‘பயோமெட்ரிக்’பதிவேடு மூலம், பயணிகள் விமானத்தில் பயணிக்கும் முன்பும், பயணம் முடித்து வெளியே செல்லும் போதும், விரல் ரேகையை பதிவு செய்து செல்ல வேண்டும்.
இதற்கான மென்பொருள் தயாரிப்பு அறிக்கையை விப்ரோ நிறுவனம்அடுத்த மாதம் விமானப்போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அனைத்து விமான நிலையங்களிலும் ஆதார் அடிப்படையிலான பயணிகள் அடையாளம் பதிவேடு கட்டாயமாக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, பயணிகள் தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்யவும் கட்டாயமாக்கப்படுகிறது. சமீபத்தில் உள்நாட்டு விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, விமானப்போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என். சூபே மற்றும் பல்வேறு விமானபோக்குவரத்து நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர்குருபிரசாத் மொகாபத்ரா கூறுகையில், “ ஆதார் அடிப்படையிலான பயணிகள் அடையாள பதிவேடு அனைத்து விமானநிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
அனைத்து விமான நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபின், இதற்கான மென்பொருளை உருவாக்க ‘விப்ரோ’ நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களின் ஆதார் எண்ணை கொடுத்து விட வேண்டும். விமானநிலையத்துக்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும், பயணிகள் தங்களின் விரல் ரேகையை பதிவு செய்து செல்ல வேண்டும்.
பயணிகள் அதிகமான சோதனை முயற்சிகளுக்கு ஆளாகாமல், எளிதாக விமானப்பயணம் மேற்கொள்ள இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.