விமானத்தில் பறக்கப் போறீங்களா ? இனி ஆதார் எண் கட்டாயம்…
விமானத்தில் பயணம் செய்வதற்காக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்துத் துறைகளிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விமான பயணத்துக்காக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கிறபோது, ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள எந்திரம் மூலம் பயணிகள் தங்களது கையை ‘ஸ்கேன்’ செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்கிறபோதே, பயணிகளின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு விடுவதால், ஆதாருக்காக பதிவு செய்து வைத்துள்ள கை ரேகையும், இப்போது ஸ்கேன் செய்கிற பயணியின் கைரேகையும் ஒத்துப்போகிறதா என்பது தெரிய வந்துவிடும். ஒத்துப்போனால்தான், விமான நிலையத்துக்குள் நுழையவும், பயணம் செய்யவும் முடியும்.
இதன்மூலம் ஒருவர் பாஸ்போர்ட்டில் இன்னொருவர் புகைப்படத்தை ஒட்டி மோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தற்போது சோதனை முயற்சியாக ஐதராபாத் விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஒரு தனியார் விமான பயணத்துக்கு மட்டும் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விரைவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.