சத்ருகன் சின்ஹா வழக்கமாகப் போட்டியிடும் பாட்னா தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு பாஜக மேலிடம் சீட்டு வழங்கியது. இதனை தொடர்ந்து  'மோடியின் தலைமையின் கீழ் இனி இருக்க முடியாது' என்று மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தார் சின்ஹா.  

பிரபல இந்தி நடிகரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஜ்பாய் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர் நடிகர் சத்ருகன் சின்ஹா. கடந்த மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலம் பாட்னா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சின்ஹா வெற்றி பெற்றார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி சின்ஹாவுக்கு அமைச்சர் பதவியை வழங்கவில்லை. அப்போது முதலே பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருந்தார் சத்ருகன் சின்ஹா. பல்வேறு சந்தர்ப்பங்களில் மோடியையும் அமித்ஷாவையும் சின்ஹா விமர்சித்துவந்தார். இதன் காரணமாக பாஜக மேலிடம் அவரை ஓரங்கட்டியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இந்நிலையில் பீகாரில் நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பாஜக, வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. சத்ருகன் சின்ஹா வழக்கமாகப் போட்டியிடும் பாட்னா தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு பாஜக மேலிடம் சீட்டு வழங்கியது. இதனை தொடர்ந்து 'மோடியின் தலைமையின் கீழ் இனி இருக்க முடியாது' என்று மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தார் சின்ஹா.


மேலும் சுயேட்சையாக பாட்னாவில் களமிறங்க யோசித்துவந்த சின்ஹா, தற்போது காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது அவரை நேரில் சந்தித்து காங்கிரஸ் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மெய்பிக்கும் வகையில் ராகுல் காந்தி அறிவித்த ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் நிதி உதவி திட்டத்தை சத்ருகன் சின்ஹா வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.