மத்திய அமைச்சர் ஹெக்டே பேச்சுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ‘சுடச்சுட பதிலடி’
மதச்சார்பின்மையாளர்கள் அப்பா பெயர் தெரியாதவர்கள் என்ற மத்திய அமைச்சர் அனந்த குமார்ஹெக்டேவின் பேச்சுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
“மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பது அல்ல, அனைத்து மதங்களையும் மதிக்கவும், ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்
கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம், குக்கனூரில் பிரம்மயுவ பரிசத் மற்றும் மகளிர் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மத்திய வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
அடையாளம் தெரியாதவர்கள்
தாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்றும், முற்போக்கு சிந்தனைவாதிகள் என்றும் கூறி தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அனைவரும் அப்பா, அம்மாவின் அடையாளம், பெயர் தெரியாதவர்கள். ஆனால், இந்த அடையாளங்கள் மூலம்தான் ஒருவருக்கு சுயமரியாதையை பெற முடியும்.
மகிழ்ச்சி அடைவேன்
ஆனால், ஒருவர் தான் மதத்தின், சாதியின் பெயராலும் அடையாளப்படுத்திக் கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், தான் மதச்சார்பற்றவர் எனக் கூறும்போதுதான் பிரச்சினையும், சிக்கலும் உருவாகிறது.
நான் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால், இதற்கு முந்தைய காலங்களில் காலத்துக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டுள்ளது என்பதையும் உணர வேண்டும். எதிர்காலத்திலும் மாற்றப்படும். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவே நாங்கள் இருக்கிறோம்
இவ்வாறு பேசி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது-
தரம் தாழ்ந்து
மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி. ஆனால்,மதச்சார்பின்மையாளர்கள் குறித்தும், பெற்றோர்கள் குறித்தும் எப்படி கீழ்த்தரமாக இவரால் கருத்து கூற முடிகிறது?
ஜென்டில் மேன்,
மதச்சார்பற்ற மனிதர்களின் பெற்றோர் குறித்தும், ரத்த உறவுகள் குறித்தும் நீங்கள் மிகவும் கீழ்த்தரமான கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள்.
1. மனிதர்களின் ரத்தம் ஒருபோதும், ஒருவர் என்ன சாதி என்பதையும் , ஒருவர் என்ன மதம் என்பதையும் முடிவு செய்யாது, மற்ற எதையும் முடிவு செய்யாது.
2.மதச்சார்பின்மை என்பது, எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல், எந்த விதமான நம்பிக்கைகளும் இல்லாமல் இருப்பது அல்ல.
3. மதச்சார்பின்மை என்பது, அனைத்து மதங்களையும் மதிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் மனப்பக்குவம் கொண்டதேயாகும்.
இதுபோன்ற வெறுப்பு அரசியல் நடத்துவதில் இருந்து எப்போது நீங்கள்விழித்துக் கொள்ளப் போகிறீர்கள்?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.