கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... ஜன.1 முதல் ஆதார் எண்ணை செல்போனுடன் ஓடிபி மூலமே இணைச்சுடலாம்...
தற்போது மிகப் பெரும்பாலான மக்களும் ஆதார் அட்டையை வைத்துள்ளனர். அதில் ஏதேனும் திருத்தம் இருந்தாலோ, ஆதார் அட்டை பயன்பாடு தேவைப்படும் போதோ, மொபைல் எண் அவசியமாகிறது. ஆனால், இதை இரண்டையும் இணைப்பதற்கு, பெரும்பாலானோரும் தடுமாறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆதார் எண்ணையும் செல்போன் எண்ணையும் ஓடிபி (OTP) ஒன் டைம் பாஸ்வர்ட் எனப்படும் ரகசிய குறியீட்டு எண் மூலமே இணைக்கும் முறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற ரேஷன் கார்டு, சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் பிப்ரவரி 6ஆம் தேதி கடைசிநாள் எனக் கூறியுள்ளது.
இதையடுத்து பல்வேறு செல்போன் வாடிக்கையாளர்களும் தங்களது செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதற்காக, அந்த அந்த செல்போன் நிறுவனங்களே வாடிக்கையாளர் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. இந்த நிலையில், ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இன்னும் பலர் செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
மேலும், செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, செல்போன் சேவை வழங்கும் முகவர்கள் சிலர் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் மேலும் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. சில நேரங்களில் பயோ மெட்ரிக் இயந்திரம் பழுதாகிறது. சிலருக்கோ, முகவர்களை நாடி, ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்க நீண்டதூரம் செல்ல வேண்டும். இத்தகைய சில காரணங்களால் பலரும் இந்த இணைப்பு நடவடிக்கைக்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓடிபி., எனப்படும் ஒன் டைம் பாஸ்வர்ட் - ரகசிய குறியீட்டு எண் மூலம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணுடன் இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
எனவே இதுவரை கஷ்டப் பட்டவர்கள், இதுவரை செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள், இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்து, இலவச வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்தால், அதில் வரும் நடைமுறைகளைப் பின்பற்றி, ஓ.டி.பி. எண் மூலம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணுடன் இணைத்து விடலாமாம்!