ஆதாரைக் கட்டாயப்படுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது....மத்திய அரசுக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடிதம்
வங்கிகளில் ஆதார் மையம் அமைக்க கட்டாயப்படுத்துவது, வங்கி செயல்பாடுகளுக்கு ஆதார் கார்டைகட்டாயப்படுத்துவது ஜனநாயக உணர்வுக்கு எதிரானது என்று மத்திய அரசுக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. 3.25 லட்சம் அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது-
கடும்வேலை பளு
ஊழியர்கள், அதிகாரிகள் பற்றாக்குறையால் ஏற்கனவே கடும் வேலைப்பளுவால் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தனியார் வங்கிகள் 96 லட்சம் கணக்குகள் தொடங்கிய நிலையில், அரசு வங்கிகள் 29.13 வங்கிக கணக்குகள் தொடங்கின.
பலனை எதிர்பாராமல்
முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.79 ஆயிரத்து 697 கோடி கடன் வழங்கப்பட்டது, ரூ.62.58 லட்சம் கடன் அரசு மற்றும் கிராம வங்கிகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஜீவன் ஜோதி காப்பீடு, ஜோதி பீமா , சுரக்ஷா பீமா, தங்க பத்திர திட்டம் ஆகியவற்றை எந்த பலனும் எதிர்பாராமல் இருக்கின்ற பணியாளர்களை வைத்து செய்து வருகிறோம்.
எதிர்ப்பு
ஆனால், வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் ஆதார் அடிப்படையில் அமைய வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், ஆதார் மையங்களையும் அரசு வங்கிகளின் 10 சதவீத கிளைகளில் திறக்கவும் கூறியுள்ளது. இதை வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கிறது.
தவறுக்கு யார் பொறுப்பு
ஆதார் கார்டுகள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக வங்கி ஊழியர்கள் , அதிகாரிகள் விடுமுறைகூட எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று அரசு நினைப்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். ஆதார் மையங்கள் குறித்த எந்த விதமான பயிற்சியும் அதிகாரிகள், ஊழியர்கள் எடுக்காத நிலையில், தவறுகள் நேர்ந்தால் பணியில் இருக்கும் அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க நேரிடும்.
ஜனநாயகத்துக்கு எதிரானது
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது என்று கூறியுள்ளது. மேலும் ஆதார் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
அப்படி இருக்கையில் அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயப்படுத்துவது ஜனநாயக உணர்வுக்கு எதிரானதாகும். மேலும், வங்கிகளின் முதலீடு, வளங்கள் பற்றாக்குறையான நிலையில் இருக்கும் போது, வராக் கடனால் தவித்து வரும்போது, கூடுதல் சுமையாக ஆதார் மையங்களை திறப்பது அரசு வங்கிகளை மேலும் சிரமப்படுத்தும் செயலாகும்.
விடுமுறை நாட்களில் பணி செய்யும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் தரப்படவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.