அங்கன்வாடியில் சாப்பிடனும்னா குழந்தைகளுக்கு ஆதார் அவசியம்… மத்திய அரசு உத்தரவு !!
தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இனி ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கிக்கணக்கு தொடங்க, தொலைபேசி இணைப்பு வாங்க, அரசின் நலத்திட்டங்களைப் பெற என ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம், என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை இணைமந்திரி வீரேந்திர குமார், தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் ஆதார் பதிவு கட்டடாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்காக , ஆதார் அட்டை இல்லாத ஊட்டச்சத்து சாப்பிடும் குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..
அதுவரை பிற அடையாள அட்டைகளை காட்டி குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் அளிக்கப்பட்டுவரும் சேவைகளை பெறலாம் என்றும், இதன் மூலம் தனிப்பட்டவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து விவரங்களை ஆதார் அட்டை உதவியுடன் பெற முடியும் வீரேந்திரகுமார் தெரிவித்தார்.
அங்கன்வாடிகளுக்கு குழந்தைகள் வராமல் போலியாக வருகை பதிவு செய்யப்படுவதை தடுப்பதற்காக இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக வீரேந்திர குமார் கூறினார்.