காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம் - இளம்பெண்ணை விரட்டி விரட்டி சுட்டுக் கொலை
காலிக்க மறுத்த பெண்ணை துரத்தி சென்று, தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வாலிபரை, போலீசார் கண்காணிப்ப கேமரா மூலம் கண்டு பிடித்தனர். அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியானா மாநிலம் யமுனா விகார் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி ரதோர் (23). நொய்டா நகரில் செக்டார் 63 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து பெண்கள் சிலருடன் தங்கி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள செல்போன் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்அஸ்வின். கடந்த சில மாதங்களாக அஸ்வின், அஞ்சலி ரதோரை காதலித்து வருகிறார். இதுபற்றி பலமுறை அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அஞ்சலி அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், அஸ்வினுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
ஆனாலும் அஸ்வின், அவரை பின்தொடர்ந்து பல நாட்களாக சென்றுள்ளார். ஆனால், அஸ்வினை பார்க்கவோ, பேசவோ ரதோர் விரும்பவில்லை. பல நாட்களாக செல்போனில் அஸ்வானி தொடர்பு கொண்ட போதும் பேச முன்வரவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுமார் 6மணியளவில் ரதோருக்கு மீண்டும் அஸ்வானி போன் செய்தார். போனை எடுத்து கொண்டு அஞ்சலி ரதோர், அவர் தங்கியுள்ள குடியிருப்பின் கீழ் உள்ள பார்க்கிங் பகுதிக்கு சென்றார்.
அப்போது அங்கு அஸ்வின் நின்றிருந்தார். அவரை பார்த்ததும், அஞ்சலி ரதோர், மீண்டும் வீட்டுக்கு செல்ல முயன்றார். ஆனால், அவரை பின்தொடர்ந்து துரத்தி சென்ற அஸ்வின், மிரட்டியபடி அருகில் சென்று, மறித்து நிறுத்தினார்.
இதனால் பயந்துபோன அஞ்சலி ரதோர், தனது தலையை கைகளை கொண்டு மறைத்தவாறு ஓட தொடங்கினார். ஆனாலும், துரத்திச்சென்ற அஸ்வின், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அஞ்சலி ரதோரின் தலையில் சுட்டார். இதில் அலறி துடித்தபடி அவர், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதை பார்த்ததும், அஸ்வின் அங்கிருந்து தப்பிவிட்டார்.
அந்த நேரத்தில், அஞ்சலியுடன் அறையில் தங்கியுள்ள தோழி ஒருவர், கல்லூரிக்கு புறப்பட்டு கீழே இறங்கி வந்தார். அங்கு அஞ்சலி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து நொய்டா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில், அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஒரு வாலிபர், அஞ்சலியை விரட்டி சென்று, துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. ஆனால், கொலையாளியின் முகம் தெளிவாக தெரியவில்லை என போலீசார் கூறுகின்றனர்.
மேலும், கொலையாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.