இறந்த யானை குட்டியை, யானைக்கூட்டம் சுமார் 7 கிலோ மீட்டர் தூக்கிக்கொண்டு கிராமங்களுக்குள் பயணித்த சம்பவம் பொதுமக்களை அச்சம் அடையவைத்துள்ளது.
தாய் யானை பாசப்போராட்டம்
குட்டி யானை இறந்தால் தாய் யானை நடத்தும் பாசப்போராட்டத்தை பல்வேறு சம்பவங்களில் கேள்வி பட்டிருப்போம், இதே போல கூட்டத்தில் இருக்கும் ஒரு யானை இறந்தால் மற்ற யானைகள் எளிதில் விட்டுச் செல்லாது. முயன்று பார்த்து உணர்ந்த பின்னரே அந்த இடத்தை விட்டு நகரும். இந்தநிலையில் இதே போன்ற பாச போராட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் தனது இறந்த குட்டியை சுமந்து கொண்டு யானை ஒன்று தனது கூட்டத்துடன் சுற்றிய சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள சுனாபதி தேயிலை தோட்டத்தில் நேற்று காலை யானைக்குட்டி ஒன்று இறந்துள்ளது. இதனையறியாத தாய் யானை பல முறை குட்டியானையை எழுப்ப முயற்சித்துள்ளது. காலால் தள்ளியும், தும்பிக்கையால் தட்டியும் எழுப்பி பார்த்துள்ளது. இருந்த போதும் குட்டியானை எழும்பாத நிலையில் தனது தும்பிக்கையில் குட்டியானையை கிராம பகுதிக்குள் தாய் யானை தூக்கி சென்றது. 30 முதல் 35 யானைகள் கொண்ட கூட்டம் ஒரு தேயிலை தோட்டத்தில் இருந்து மற்றொரு தேயிலை தோட்டத்திற்கு சுமார் 7 கிலோ மீட்டர் இறந்த யானை குட்டியை தூக்கி கொண்டு பயணித்துள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களை அச்சமடைய செய்தாலும், தனது குட்டியின் மேல் தாய் யானை வைத்துள்ள பாசத்தை உணர முடிந்ததாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ரெட்பேங்க் தேயிலைத் தோட்டத்தில் உள்ள புதர் அருகே யானைகுட்டியின் உடலை கிடத்திய நிலையில் யானைகள் கூட்டம் அந்த பகுதியில் சுற்றி வருகிறது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
