A police officer who assured the assassin was surprised by the release of audio

ஆணவக் கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உதவுவதாக போலீஸ்காரர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள நட்டாசேரி பகுதியை சேர்ந்தவர் கெவின் ஜோசப். இவரும் கொல்லம் அருகே தென்மலை பகுதியை சேர்ந்த நீனு என்பவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் தெரியவந்ததும் நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கெவின் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவர்கள் காதலை ஏற்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினர்.

தென்மலை அருகே சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு ஏரியில் கெவின் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு கெவின் பலமாகத் தாக்கப்பட்டு கிடந்துள்ளார். உடனடியாக பிணம் கிடந்த ஏரிக்கு சென்று உடலைக் கைப் பற்றி கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

போலீசாரால் தேடப்பட்ட சாக்கோ ஜாண், சயானு சாக்கோ ஆகியோர் நேற்று கண்ணூர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.



இந்த கொலையில் ஆரம்பம் முதலே போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. கெவின் கடத்தப்பட்டவுடன் அவரது மனைவி நீனு காந்திநகர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அப்போது சப்- இன்ஸ்பெக்டர் ஷிபு, தான் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு செல்வதால் உடனே அந்த புகாரை விசாரிக்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். அவர் உடனடியாக விசாரணை நடத்தி இருந்தால் கெவின்னை காப்பாற்றி இருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்துஅடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்நிலையில், கொலையாளி சயானு கொலை நடந்த அன்று காந்தி நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த உரையாடலில் சயானு அந்த போலீசிடம் பேசும்போது; நாங்கள் கெவின்னை வீடு புகுந்து தாக்குதல் நடத்தினோம். அங்கிருந்த கெவினை காரில் கடத்திச் சென்றோம். எனக்கு பின்னால் வந்த காரில் கெவின்னை ஏற்றி வந்தபோது அவர் எங்களிடம் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவர் எப்படியும் உங்கள் போலீஸ் நிலையத்திற்குதான் வருவார் என்று கூறுகிறார்.

அதற்கு பதில் அளித்த போலீஸ் கெவின் எப்படி தப்பினார், எந்த இடத்தில் வைத்து தப்பிச் சென்றார் என்று கேட்க. அதற்கு, சயானு இடம் சரியாக தெரியவில்லை என்று கூறுகிறார். அதற்கு, அந்த போலீஸ் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்கிறேன். பயப்படாமல் இருங்கள் என்று அவருக்கு தைரியம் சொல்கிறார்.



மேலும் சயானு தனக்கு திருமணமாகி 6 மாதம் தான் ஆவதாக கூறி தனது மனைவி பற்றியும் கவலையாக போலீஸிடம் சொல்ல அவருக்குஅவருக்கு போலீஸ்காரர் ஆறுதல் கூறுகிறார். அத்துடன் அந்த உரையாடல் முடிகிறது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. கொலையாளியுடன் பேசும் அந்த போலீஸ்காரர் யார்? என்பதை கண்டுபிடிக்க விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளது.