முஸ்லிம் பசங்களை லவ் பண்ணுவியா ? இளம்பெண்ணைத் தாக்கி இழுத்துச் சென்ற போலீஸார் !! உ.பி. பயங்கரம் !!
முஸ்லிம் இளைஞருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை மீரட் போலீஸார் அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு பெண்ணை, ஒரு பெண் போலீஸார் உள்பட 3 போலீஸார் அடித்து உதைத்து ஜீப்பில் ஏற்றிச் செல்கின்றனர். அந்தப் பெண்ணிடம் நீ இந்துவாக இருந்து கொண்டு ஒரு முஸ்லிம் இளைஞரோடு ஏன் பழகுகிறாய், இந்து இளைஞர் இல்லையா என்று ஆண் போலீஸார் கேட்டு அந்தப் பெண்ணைத் தாக்குகின்றனர்.
மேலும், பெண் போலீஸார் ஒருவரும் அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறைந்த காட்சியும் அதில் இருக்கிறது.
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. மீரட் மருத்துவக் கல்லூரி அருகே இந்தப் பெண்ணும், முஸ்லிம் இளைஞர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இதைப் பார்த்த விஎச்பி அமைப்பினர் இருவரையும் தாக்கி, போலீஸுக்குத் தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு இருவரையும் தனித்தனி வாகனங்களில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமைக் காவலர் சலேக் சந்த், கான்ஸ்டபிள் நீது சிங், பெண் போலீஸ் பிரியங்கா ஆகியோர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.