பறிபோன வேலை...! மன அழுத்தத்தால் பாட்டியைத் தாக்கிய பேத்தி கைது!
90 வயது பாட்டி ஒருவரை, அவரது பேத்தி அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை ஆதாரமாக கொண்ட போலீசார், அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் தீபா (40). இவர் தனது தாய், பாட்டி கல்யாணி (90), மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
தீபா பார்த்து வந்த வேலை சமீபத்தில் பறிபோனது. வேலையை இழந்ததால் தீபா மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. வேலை பறிபோனதில் இருந்து வீட்டுச் செலவை சமாளிக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளார் தீபா.
இதற்கிடையே பாடடி கல்யாணிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதால், அவ்வப்போது மருத்துவ செலவும் செய்ய வேண்டி இருந்தது. பண பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்து வீட்டார் சமாதானம் கூறியபோதிலும், தீபா அவர்களுடன் கடுமையாக வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாட்டி கல்யாணி, வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தீபா, பாட்டியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பாட்டியை திட்டிய தீபா, திடீரென அவரைத் தாக்கி கையாலும், செருப்பாலும் அடித்து துன்புறுத்தனிர். அடி தாங்க முடியாமல் அவரின் பாடடி கல்யாணி அலறி துடித்துள்ளார்.
பாட்டி போர்த்தயிருந்த போர்வையோடு அவரை தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளி, கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காட்சியை, சிலர் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். பாட்டியைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, தீபாவை கைது செய்ய வலியுறத்தப்பட்டது.
இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு கண்ணூர் போலீசார், தீபாவை கைது செய்துள்ளனர். முதியவரைத் தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தீபா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தீபாவின் தாய், பாட்டி கல்யாணி ஆகியோரை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.