நாட்டில் 95 சதவீதம் பேருக்கு பெட்ரோல் தேவைப்படுவதில்லை... உ.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!
நாட்டில் 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவைப்படுவதில்லை என்று உத்தரபிரதேச அமைச்சர் உபேந்திரா திவாரி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருந்தாலும், இந்தியாவில் தினந்தோறும் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை ரூ.100 ஐ எப்போதோ தாண்டிவிட்டது. டீசல் விலை ரூ.100ஐ எட்டிப் பிடித்திருக்கிறது. இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை விஷயத்தில் பாஜக தலைவர்கள் அவ்வப்போது சர்ச்சையாக எதையாவது பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் உ.பி. அமைச்சர் உபேந்திரா திவாரி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. “நாட்டில் சொற்ப எண்ணிக்கையில்தான் மக்கள் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்குதான் பெட்ரோல் தேவைப்படுகிறது. நாட்டில் 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவைப்படுவதில்லை. தனிநபர் வருமானம் அதிகரித்துள்ள நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.