வயசானா எங்களால முடியாதா…ரெயில்வேயின் நஷ்டத்தை எண்ணி ரூ.40 கோடி மிச்சப்படுத்திய முதியோர்கள்
ரெயில்வே துறை ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி இழப்பில் செயல்படுவதை நினைத்து, ஏறக்குறைய 9 லட்சம் முதியோர்கள் தங்களுக்கு எந்த மானியமும் வேண்டாம் என டிக்கெட் முன்பதிவின் போது விட்டுக்கொடுத்துள்ளனர்.
இதன் மூலம், கடந்த 4 மாதங்களில் ரெயில்வேக்கு ரூ.40 கோடி மிச்சமாகியுள்ளது.
ரெயில்வே ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி நஷ்டத்தில் செயல்படுவதால், அதை இழப்பில் இருந்து காக்க மானியத்தை கைவிடக்கோரி கடந்த ஜூலை மாதம் ரெயில்வே துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
ரெயில் டிக்கெட் முன்பதிவின்போது, முதியோர்களுக்கு 100சதவீதம் மானியம், 50 சதவீதம் மானியம், மானியம் தேவையில்லை என்ற கட்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் எதை வேண்டுமானாலும் முதியோர்கள் தேர்வுசெய்யலாம். ஆண்களைப் பொருத்தவரை 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரெயிலில் 50 சதவீதம் கட்டணமும், பெண்களில் 58 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பாதிக்கட்டணமும் மானியமாக அளிக்கப்படுகிறது.
இதன்படி, கடந்த ஜூலை 22 ந்தேதி முதல் அக்டோபர் 22 ந்தேதிவரை கடந்த 4 மாதத்தில் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுசெய்யப்பட்டது.
இதில் 8.60 லட்சம் மூத்த குடிமக்கள் தங்களுக்கு ரெயில்வே அளிக்கும் டிக்கெட் கட்டண மானியத்தை வேண்டாம் என தாமாக முன்வந்து தெரிவித்துள்ளனர். நாட்டில் ஒட்டுமொத்தமாக ஒருகோடியே 69 லட்சம் மூத்த குடிமக்கள் ரெயிலில் பயணம் செய்துள்ள நிலையில், இதில் 8.60 லட்சம் முதியோர்கள் தங்கள் சலுகையை விட்டுக்கொடுத்துள்ளது வெறும் 5 சதவீதம் மட்டும்தான். இதன் மூலம் ரெயில்வே துறைக்கு 4 மாதங்களில் ரூ.40 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ கடந்த 4 மாதத்தில் ரெயிலில் 1.69கோடி மூத்த குடிமக்கள் பயணம்செய்ததில் 9 லட்சம் முதியோர்கள் மானியத்தை தாமாக முன்வந்து கைவிட்டுள்ளனர். இதன் மூலம் ரெயில்வேக்கு ரூ.40 கோடி சேமிப்பாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.
ரெயில்வே துறை பலவிதமான மானியத்தை பல்வேறு தரப்பினருக்கு அளித்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், ராணுவத்தினர் உள்ளிட்ட பலபிரிவினருக்கு அளிக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1600 கோடி மானியமாக அளிக்கிறது குறிப்பிடத்தக்கது.