நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 75 மாவட்டங்களில் 31ம் தேதி வரை ஊரடங்கை தொடர செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

உலகளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 370 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இன்று சுய ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. கடைகள், உணவகங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தான பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் ரயில் சேவை என அனைத்து வகை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 75 மாவட்டங்களில் 31ம் தேதி வரை ஊரடங்கை தொடர செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

பிரதமரின் முதன்மை செயலர் தலைமையில் மாநில தலைமை செயலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கொரோனா பரவுதலை தடுக்க தொடர் ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி ஆலோசனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும் விதமாக மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் 31 ம் தேதி வரை தடை செய்யப்பட இருப்பதாக உள்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக கூடும்.