Republic Day: 74வது குடியரசு தினத்தில் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி
74வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைவர்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி:
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் குடியரசு தினம் மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் கனவுகளை நிறைவேற்ற நான் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அனைத்து இந்தியர்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா:
74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்று, நாட்டு விடுதலைக்காகவும், வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் மற்றும் துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்
காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி:
ஒற்றுமை, நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் இறையாண்மை ஆகியவைதான் நமது அரசியலமைப்பின் தூண்களாகவும் நமது குடியரசின் ஆன்மாவாகவும் உள்ளன.
எனது அன்புக்குரிய சக இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
இந்திய குடியரசு பல சாதனைகளை படைத்திருந்தாலும், சமீபகாலத்தில் பல சவால்களை சந்தித்து வருகிறது. அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அத்தகைய உரிமைகளை பாதுகாத்து, மத, சமூக, நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கும் வகையில், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள்வதன் மூலமாகவே இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன்:
ஒவ்வொரு மனிதரும் சமமாக நடத்தப்படும்போதுதான் குடியரசு அதன் முழுமையான அர்த்தத்தை எட்டுகிறது. நாட்டின் இறையாண்மை குடிமக்களிடமே நிலைகொண்டுள்ளது என்பதை உணர்த்திய முன்னோடிகளை வணங்கி சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம். குடியரசு தின நல்வாழ்த்துகள்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்:
நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய நன்னாள். நமது தேசத் தலைவர்கள் முன்னெடுத்துக் கொடுத்த இறையாண்மை, பொதுவுடமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கவும், அரசியலமைப்பு சாசனம் வகுத்து கொடுத்த ஜனநாயக கடமைகளை உணர்ந்து, பொறுப்புள்ள குடிமக்களாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். மாதம் ஒருமுறை கதர், கைத்தறி ஆடைகளை உடுத்தி, நம் பாரம்பரிய பெருமையை நிலைநிறுத்துவோம்.