7 years jail for sotta rajan on fake passport case

அரசை ஏமாற்றி போலியாக பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவுத் இப்பாஹிமின் நெருங்கிய நண்பரான சோட்டா ராஜன் உள்ளிட்ட 4 பேர் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கைது

மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமின் நெருங்கிய நண்பரான சோட்டாராஜனை இந்திய போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் 2015ம் ஆண்டு இந்தோனேஷியாவில்உள்ள பாலி தீவில் இருந்த போது சோட்டா ராஜனை சர்வதேச போலீசார் கைது செய்து சி.பி.ஐ. அமைப்பிடம் ஒப்படைத்தனர்.

அவர் மீது டெல்லி, மும்பை பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

போலி பாஸ்போர்ட்

பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோகன்குமார் என்ற பெயரில் சோட்டா ராஜன் போலிபாஸ்போர்ட் பெற்றதாக கடந்த 1998–ம் ஆண்டு சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

அதிகாரிகள் உடந்தை

மேலும், போலி பாஸ்போர்ட்டு சோட்டா ராஜனுக்கு கிடைக்க வகை செய்ய உதவியாக இருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஜெயஸ்ரீ தத்தாராய் ரகட்டே, தீபக் நட்டுவர்லால் ஷா மற்றும் லலிதாலட்சுமணன் ஆகிய 3 பேர் மீதும் மோசடி, போலியாக ஆவணங்கள் தயாரித்தல், சதித்திட்டம், அடையாளத்தை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளிகள்

இந்த நிலையில், போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜன் மற்றும் மூன்று ஓய்வு பெற்ற அதிகாரிகளும் குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து ஜாமீனில் இருக்கும் மூன்று ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பு

இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி விரேந்திர குமார் கோயல் நேற்று இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். அதில், போலி பாஸ்போர்ட் வழக்கில் முக்கிய குற்றவாளியும், நிழல்உலகதாதாவான சோட்டா ராஜன், அவருக்கு உடந்தையாக இருந்த 
ஜெயஸ்ரீ தத்தாராய் ரகட்டே, தீபக் நட்டுவர்லால் ஷா மற்றும் லலிதா லட்சுமணன் ஆகிய 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.