கர்நாடகாவை கதறவிடும் கொரோனா.. தீவிரமடைகிறது பரவல்
கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று 5324 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டது.
கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று 5324 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டது.
இந்தியாவில் 14 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களை தொடர்ந்து கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது.
தமிழ்நாட்டில் தினமும் 60 ஆயிரம் பரிசோதனைகளுக்கு மேல் செய்யப்படுகிறது. அதில், 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதியாகிறது. அதேவேளையில், தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு உறுதியாகும் அளவிற்கு நிகராக அல்லது அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர்.
ஆனால் கர்நாடகாவில் தமிழ்நாடு அளவுக்கு அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. அதில் பாதியளவிலான பரிசோதனைகள் தான் செய்யப்படுகின்றன. ஆனாலும் கடந்த சில தினங்களாக தினமும் கர்நாடகாவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது.
இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 5324 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கர்நாடகாவில் மொத்த பாதிப்பு 1,01,965ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் இன்று மேலும் 1470 பேருக்கு தொற்று உறுதியானது. எனவே பெங்களூருவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.
கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 37685 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று மேலும் 77 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 1953 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் மிக அதிகளவிலான பரிசோதனைகள் செய்யப்படாத போதிலும் பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து கொண்டிருப்பதால், இது கர்நாடகாவில் பரவல் அதிகமாக இருப்பதை உணர்த்துகிறது.