Asianet News TamilAsianet News Tamil

உஷார் மக்களே..! முக கவசம் அணிவது கட்டாயம்..! இனி ரூ. 500 அபராதம்.. அதிரடி உத்தரவு..

டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் அங்கு பொது இடங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
 

500 rupees fine again for no mask: New Corona rules in Delhi
Author
Delhi, First Published Apr 20, 2022, 3:56 PM IST

டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் அங்கு பொது இடங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.உருமாறிய கொரோனா எக்ஸ்இ வைரஸ் சீனா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றஅச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, குஜராத் உட்பட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  டெல்லியில் தொற்று எண்ணிக்கை 2 இலக்கத்தில் இருந்தநிலையில் தற்போது 3 இலக்கமாக மாறியுள்ளது. ஏப்ரல் 11 மற்றும் 18 தேதிகளுக்கு இடையில் டெல்லி தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை ஏறக்குறைய மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு குறைந்ததால் டெல்லியில் நடைமுறையில் இருந்த கொரோனா கட்டுபாடுகள் அனைத்து தளர்த்தப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 28-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தான், தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, பள்ளிகள் முறையாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றும் வகையில் புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் பொது இடங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில், கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 

அதில், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற விதிமுறையை மீண்டும் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. பள்ளிகள் வகுப்புகளைத் தொடர அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. எனினும் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் முழுமையாக கடை பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 1,247 பேருக்கு தொற்று பதிவான நிலையில், இன்று 2,067 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,47,594 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 1,547 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios