இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்று கொள்ளுங்கள்; பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
உத்தரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் மதத்தை காப்பாற்ற இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மத தலைவரும் இதனையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பைரியா தொகுதியில் சுரேந்திர சிங் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். குழந்தை என்பது கடவுளின் பிரசாதம். ஒவ்வொரு இந்துவும் குறைந்தபட்சம் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் 2 ஆண் குழந்தைகள், 2 பெண்கள் குழந்தைகளும், கூடுதலாக ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த எம்எல்ஏ சுரேந்திர சிங் தான் கடந்த இரு மாதங்களுக்கு முன், இதேபோன்ற ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் பலாத்காரம் சாதாரணமானது. கடவுள் ராமர் வந்தாலும் அதனை தடுக்க முடியாது எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் மோடியை ராமருடனும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சூர்ப்பனகையுடனும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.