34 children died in 48 hrs

உத்தரப்பிரதேசம், கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 34 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலும் பச்சிளங் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராக இருந்து வருகிறார். கோரக்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானார்கள்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் ெபரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை மறுத்த மாநில அரசும், மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் மூளை அழற்ச்சி நோயால் குழந்தைகள் இறந்தனர் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாநில முதல்வர் யோகி ஆத்தியநாத் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

இதனால், குழந்தைகள் இறந்தது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மருத்தவர்கள் குழுவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறக்கவில்லை என்று அறிக்கை அளித்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டுமே மேலும் 35 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதில் 15 பச்சிளங் குழந்தைகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திங்கள்கிழமை மட்டுமே ஒரே நாளில் 24 குழந்தைகள் மூளை அழற்ச்சி நோயால் இறந்துள்ளனர். 

இது குறித்து மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் கூறுகையில், “ இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மூளை அழற்ச்சி நோயால் 145 குழந்தைகள் இறந்துள்ளனர். இதுவரை 550 நோயாளிகள் வரை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுள்ளனர். 60 நோயாளிகள் வரை தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்’’ எனத் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது தொடர்பாக மருத்துவர்களோ, ஊழியர்களோ ஊடகங்களுக்கு பேட்டி ஏதும் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.