இறைச்சிக்காக வலுக்கும் எதிர்ப்பு - மேகாலயாவில் மேலும் ஒரு பா.ஜனதா தலைவர் விலகல்!
இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்ற மத்திய அரசின் தடையை எதிர்த்து, ேமகாலயாவில், பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எதிர்ப்பு
இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய அரசு தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலமானேமகாலயாவிலும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
மக்கள் அதிர்ச்சி
மலைகள் சூழ்ந்துள்ள மேகாலயா மாநிலத்தில் மாட்டிறைச்சி என்பது அந்த மாநில மக்களின் பாரம்பரிய உணவாகும். அதற்கு தடைவிதித்தது, அந்த பகுதி மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜினாமா
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவி ஏற்று 3 ஆண்டை நிறைவு செய்தது. அதற்கு மாட்டிறைச்சியுடன், விருந்து வைக்கப்படும் என மேற்கு கரோ மாவட்ட தலைவர் பெர்நார்டு மாரக் என்பவர் தனது பேஸ்புக்்பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். இதற்கு பா.ஜனதா தலைமையகத்தில் இருந்து கடும் எச்சரிக்கை பெர்நார்டு மாரக்குக்கு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த தலைவர்
இந்த சம்பவம் நடந்த 4 நாட்களுக்குள்,மாடு விற்பனை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கரோ மாவட்டத்தின் பா.ஜனதா தலைவர் பச்சு மாரக்கும் தனது பதவியை ராஜினாமா செய்து, மாநிலத்தலைவர் சிபுன் லிங்டோவிடம் கடிதம் அளித்துள்ளார்.
கலாச்சாரம் முக்கியம்
இது குறித்து பச்சு மாரக் நிருபர்களிடம் கூறுகையில், “ எங்களின் கரோஸ்சமூகத்தின் உணர்வுகளை நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். எனது சமூகத்தின் உணர்வுகளை பாதுகாப்பது எனது கடமை. மாட்டிறைச்சி உண்பது எனது கலாச்சாரம் பாரம்பரியம். பா.ஜனதாவின் மதச்சார்பற்ற உத்தரவை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
கட்சி கடைசிதான்
என்னுடைய கலாச்சாரம், பாரம்பரியம்தான் எனக்கு முன்னுரிமையாகும். கட்சி என்பது கடைசி தான். ஏன் மாட்டிறைச்சியை மட்டும் பிரச்சினையாக்குகிறீர்கள். பன்றி, கோழி, ஆடு என பல மிருகங்கள் இருப்பது தெரியவில்லையா’’ எனத் தெரிவித்துள்ளார்.
பின்வாங்கும் பா.ஜனதா....
அனைத்து மாநிலங்களிலும் மாட்டிறைச்சி தடை வேண்டும் என கேட்கும் பா.ஜனதா கட்சி, மேகாலயாவில் தடை விதிக்க மறுத்து வருகிறது. அது குறித்து மேகாலயா பா.ஜனதா பொறுப்பாளர் நலின் கோலி கூறுகையில், “ மேகாலயா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் மாட்டிறைச்சி தடை கொண்டுவரப்படும் என்று கூறுவது பொய்யானது. இது காங்கிரஸ் கட்சியினரால் திட்டமிட்டு பொய்யான செய்தி பரப்பிவிடப்படுகிறது. எங்கள் தேர்தல் அறிக்கையில் மாட்டிறைச்சி தடை இருக்காது’’ எனத் தெரிவித்தார்.