7 ஆண்டுகள் காத்திருந்தேன் 1,552 பக்க தீர்ப்பில் சி.பி.ஐ. தரப்பை வறுத்து எடுத்த நீதிபதி. ஓ.பி. ஷைனி
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தீர்ப்பு அளிப்பதற்காக 7 ஆண்டுகள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். ஆனால், சி.பி.ஐ. தரப்பு உண்மையான ஆதாரங்களை கொண்டுவரவில்லை என்று சிறப்பு நீதிமன்ற ஓ.பி. ஷைனி தீர்ப்பில் வேதனை தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிபதி ஓ.பி. ஷைனி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் அவர் கூறியிருப்பதாவது-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஆதாரங்களை கொண்டு வந்து சி.பி.ஐ. தரப்பு சேர்ப்பார்கள் என கடந்த 7 ஆண்டுகளாக எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். ஆனால், அனைத்தும் வீணாகப்போனது. ஏனென்றால், இந்த வழக்கு முற்றிலும் வதந்திகள், வாய்மொழியாக வந்த செய்திகள், ஊகத்தின் அடிப்படையில் புனையப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கையில் பொதுமக்களின் எண்ணங்களுக்கு இடமில்லை.
கடந்த 7 ஆண்டுகளாக கோடை கால விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் நான் நீதிமன்றத்துக்கு வந்தேன். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நான் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கொண்டு வரும் ஆதாரங்களுக்காக காத்திருந்தேன். ஆனால், அனைத்தும் வேதனையில் முடிந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நடக்கும்போது, ஏராளமான மக்களின் கவனத்தை ஈர்த்தது, ஒவ்வொருவரும் இந்த வழக்கின் விசாரணையை கூர்ந்து நோக்கினர். இதனால், விசாரணை நடந்தபோது, நீதிமன்ற அறைகளில் மக்கள் கூட்டம் கூடி இருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் முன், ஏராளமான சாட்சியங்கள் ஆஜரானார்கள். நீதிமன்றத்தில் உண்மையான ஆதாரங்களும் சி.பி.ஐ. தரப்பால் எடுத்து வைக்கப்படவில்லை. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பியபோதும், அனைத்து தரப்பினும் அதை திரும்பப்பெற்று, சென்றுவிட்டனர்.
நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களும், பதில் மனுக்களும் சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அதில் மனுக்களில் எந்த மூத்த அதிகாரியோ அல்லது அரசு தரப்பு வழக்கறிஞரோ கையொப்பம் இடவில்லை. ஜூனியர் அதிகாரி மட்டுமே கையொப்பம் இட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவித்தார்.