பீகாரில் 27 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு...!!!
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் இன்று 27 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரியஜனதா தளம் ஆகிய கட்சியுடன் கூட்டணி சேர்த்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்தது. 20 மாதங்கள் பிரச்சினையின்றி ஆட்சி சென்றது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரின் மகனும், துணை முதல்வரான தேஜஸ்வி யாதவ் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, பதவி விலகுவார் தேஜஸ்வி என எதிர்பார்கப்பட்ட நிலையில், நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்கு உடனடியாக பா.ஜனதா கட்சி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, பா.ஜனதா துணையுடன், நிதிஷ்குமார் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைத்தார். கடந்த 27-ந்தேதி முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக சுஷில்குமார் மோடியும் பதவி ஏற்றனர். இதையடுத்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 131 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் நிதிஷ்குமார் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், 27 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டது. அமைச்சர்களுக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் 16 அமைச்சர்களும், பா.ஜனதா கட்சி சார்பில் 12 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.